Friday, April 16, 2010

குழந்தை செல்வம் கொடுக்கும் பதிகம்


கண்காட்டும் நுதலானுங், கனல் காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே

மண்ணோடு நீர், அனல், காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினோடு ஆண் பெருமையோடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே

விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல் விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகு என்று
தடமண்டு துறைகெண்டை தாமரையின்பூ மறையக்
கடல் விண்ட கதிர் முத்த நகை காட்டும் காட்சியதே

வேலைமலி தண்கானல் வெண் காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேல் அடர், வெங்காலன், உயிர், விண்டபினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதியநுதல் உமையோர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பலஒதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைந்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறைவனே

பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோவில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர் வரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழிபொருள் என்றும்
பேதையர்கள் அவர், பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே

தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே

திருச்சிற்றம்பலம்