சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே
சிந்தா எனுமால் சிவனே எனுமால்
முந்தா எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே
அறையார் கழலும் அழல் வாயரவும்
பிறையார் சடையும் உடையார் பெரிய
மறையோர் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளைகொண் டெழில் வவ்வினையே
ஒலிநீர் சடையில் கரந்தாயுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வாய்இவளை
மெலிநீர்மையள் ஆக்கவும் வேண்டினையே
துணிநீல வண்ணம் முகில் தோன்றியன்ன
மணிநீலகண்டம் உடையாய் மருகல்
கணிநீலவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீல ஒண்கண் அயர்வு ஆக்கினையே
பலரும் பரவப்படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்றுடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோர்ந்து
அலறும் படுமோ அடியாள் இவளே
வழுவாள் பெருமான் கழல் வாழ்கஎனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாத தொர் தீத்திரளாய் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக்கினையே
அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறிஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே
திருச்சிற்றம்பலம்