நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே
கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரைஏருஞ் சிராப்பள்ளி
வேம்முகவேழ்ந்து ஈருரி போர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே
துறை மல்கு சாரற் சுனை மல்கு நிலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி யுடையவன் எங்கள் பெருமானே
கொலை வரையாத கொள்கையர் தங்கம் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமையுரைப் பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே
வெய்யதண் சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய போன் சேருஞ் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வார் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே
வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிர் றாகாதே
மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன் தன்
தலைகலனாகப் பலி திரிந்துண்பர் பழியோரார்
சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால்
சிலவல போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடை செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே
நானாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெருதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே
தேனயம் பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத் தவரோடு மன்னி வாழ்வரே
திருச்சிற்றம்பலம்