Sunday, April 4, 2010

துன்பங்களை நீக்கி இன்பம் தந்தருளும் பதிகம்..

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனை பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கனைத்தெழுந்த வேண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

மலை புரிந்த மன்னவன்றன் மகளையோர் பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை யாரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடுந் தலைவநின் தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடைமேர் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கனையால்
மாறுகொண்டார் புரமெறித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதேன்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் நேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்
கேழல் வெண்கொம் பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமனும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே

திருச்சிற்றம்பலம்